Saturday 14 June 2008

தமிழ் நாடு என்ன முட்டாள் தேசமா ?

தமிழ்நாடு என்ன முட்டாள் தேசமா ?

சென்னை முழுவதையும் ஆங்கிலத்துக்கு மாற்றி விட்டார்கள் நம் சகோதரர்கள். தமிழே பேசும் மக்களையும் ஏளனமாக பார்க்கிறார்கள்.

படிக்காத மூடன் இன்று படித்தவனாகிவிட்டான். ஆனால், இவன் பண்பில்லாத மிருகமாக திரிகிறான். தமிழ் சமுதாயம் தம் சுய அறிவினால் வளரவில்லை. மாறாக மேற்கத்தியவர்களைப் பார்த்து காப்பியடித்து அவர்களின் அடிமைகளாகவே வளர்ந்திருக்கிறார்கள். சுயசிந்தனையை தராத கல்வியை திணித்திருக்கிறார்கள். இப்போது இந்த படித்த பண்பில்லாதவன் சென்னை மட்டுமல்லாது, கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற எல்லா நகரங்களுக்கும் சென்றுவிட்டான். இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் படித்தவன் மட்டும் தான் ஆங்கிலம் பேசினான். ஆனால் இன்று எல்லா தர மக்களும் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆங்கிலம் பேசுவது தவறல்ல. ஆங்கிலம் மட்டுமே பேசுவது தான் தவறு. ஆங்கிலத்தை எங்கு எப்போது யாரிடம் எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று பொது அறிவை (Common Sense) பயன்படுத்தி பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து தமிழை மறந்து எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது முட்டாள்தனமல்லவா ?

ஆங்கிலம் பேசினால் மட்டும் வெள்ளைக்காரனாகி விட முடியுமா ?
வெள்ளைக்காரனைப் போல் ஆக வேண்டுமெனில், முதலில் அவனைப் போல் சிந்திக்க வேண்டும்.அப்படி சிந்திக்க ஆரம்பித்தால் முதலில் எங்கும் தமிழைத் தான் பயன்படுத்துவான் மரத்தமிழன்.

ஆங்கிலம் கற்பதற்கு வெறும் ஆறு மாதங்களே போதும். திறமையில்லாதவன் கூட ஆங்கிலத்தை 2 ஆண்டுகளில் கற்று கொண்டுவிட முடியும். ஆங்கிலம் கற்பதற்காக தமிழை அழிப்பது மகா மூடத்தனம். ஆங்கிலத்தை வெறும் வியாபார கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

உண்மையான தமிழர்கள் இப்போது தமிழ் நாட்டில் செத்துக் கொண்டே வருகிறார்கள். சில உண்மையான தமிழர்கள் வேறு நாடுகளில் இருக்கிறார்கள். ஆங்கிலமே பேசினாலும் இவனை வெள்ளைக்காரன் என்று வெள்ளைக்காரன் ஏற்று கொள்ள மாட்டான். இதனால் இவர்கள் புதுவித கலப்பு வம்சமாக திகழ்கிறார்கள். இந்த கலப்பு வம்சாவளியை கொண்ட நாட்டிற்கு தமிழ்நாடு என்பது பெயர் பொருத்தமில்லை. இதற்கு தமிழ் நாட்டை இப்போது முட்டாள் தேசம் என்று பெயர் மாற்றினால் வெகு பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

No comments: